சென்னை,
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து அப்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த சம்பத்குமார் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழிபெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழுநேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.
இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12-ந் தேதிக்குள் தோனி செலுத்த வேண்டும் ன்று உத்தரவிட்டார்.