Image Courtesy : Twitter 
கிரிக்கெட்

"தோனி தன் கிரிக்கெட் பேட்டை கடிப்பதற்கு இதுதான் காரணம் " - ரகசியத்தை கூறிய அமித் மிஸ்ரா..!!

தோனியின் செயலுக்கு காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு அமித் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி டெவன் கான்வே அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங் ஆடும் போது அடுத்ததாக களமிறங்குவதற்கு தோனி தயாராக இருந்தார். டக் அவுட்டில் இருந்த அவர் தனது பேட்டை கடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது.

நேற்றைய போட்டியில் மட்டுமின்றி இதற்கு முன்பும் தோனி பல போட்டிகளில் இதை செய்திருக்கிறார். தோனி இவ்வாறு செய்வதற்கு காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அமீத் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், " தோனி தனது பேட்டை அடிக்கடி கடிப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதற்கு காரணம் அவரின் பேட்டில் உள்ள டேப்கள், நூல்கள் ஏதேனும் வெளியே வந்திருந்தால் அதனை அவர் எடுப்பதற்காக அவ்வாறு செய்வார். அவருக்கு அவரது பேட் சுத்தமாக இருக்க வேண்டும்.

இதனால் தான் தோனி பேட்டிங் செய்கையில் ஒரு நூல் அல்லது டேப் கூட அவரின் பேட்டில் இருந்து வந்ததே இல்லை." என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.