கிரிக்கெட்

கெய்க்வாட் அரைசதம்... குஜராத்துக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதி வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் 11(15) ரன்களிலும் அடுத்து வந்த உர்வில் படேல் 4(3) ரன்களிலும் தொடர்ந்து வந்த சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் இணைந்த கெய்க்வேட் - பிரெவிஸ் ஜோடி ரன் சேர்ப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், பிரெவிஸ் 2(9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்னை தடுமாறிய நிலையில், கெய்க்வாட்டுடன் சிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது.

ரன் 100-ஐ நெருங்கும்போது சிவம் துபே 22(17) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கார்த்திக் சர்மா முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 100-ஐ தொட்டது. மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கெய்க்வாட் 49 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனின் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதம் இதுவாகும்.

தொடர்ந்து இருவரும் அதிரடி காட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அப்போது கார்த்திக் 15(9) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த ஓவர்டன் 19-வது ஓவரில் 3 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி அவுட்டானாார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 74(60)*ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்க உள்ளது.