கிரிக்கெட்

ஐகோர்ட்டு சென்ற கம்பீர்... ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு - ஏன்?

கடந்த ஆண்டு இறுதியில், கம்பீரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டீப்பேக் வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது முகம், குரல் மற்றும் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலி வீடியோக்கள் பரவி வருவது குறித்து அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க ஐகோர்ட்டை அணுகியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில், கம்பீரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. ‘வாய்ஸ் கிளோனிங்’ மற்றும் ‘பேஸ் ஸ்வாப்பிங்’ தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்களில், அவர் கூறாத கருத்துகள் கூறியதாக காட்டப்பட்டது. குறிப்பாக, தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இந்திய அணியின் மூத்த வீரர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகள் தெரிவித்ததாகவும் காட்டப்பட்டிருந்தது.

இந்த வீடியோக்களை உண்மையென நம்பிய பலரும் சமூக வலைதளங்களில் கம்பீரை விமர்சித்னர். இந்நிலையில், அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோவிற்காக ரூ.2.5 கோடி இழப்பீடு கோரியுள்ள கம்பீர், அந்த வீடியோக்களை உடனடியாக இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.