மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நாட்டுக்காக விளையாடுவது பெருமை என்றும், ஒவ்வொரு முறையும் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக புதுமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
எனினும், தனது முதல் சர்வதேச இன்னிங்ஸில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அறிமுக போட்டிக்கு பிறகு, இந்திய ஜெர்சி அணிந்திருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த சூர்யவன்ஷி, தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பதிவில், "எனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது மூத்த வீரர்கள் மற்றும் நலவிரும்பிகள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய பெருமை. ஒவ்வொரு முறையும் அணிக்காக என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. 191 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல்லின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.