7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 33 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்தார்
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தனர்.தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்கள், லோகேஷ் ராகுல் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர் . இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் 2 இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
ரிஷாப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களிலும் , ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 35 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் கரிம் ஜனத்,குல்படின் நைப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி 35 ரன்களும், ஹஸ்ரத்துல்லா ஜசாய் 13 ரன்களும், ரமனுல்லா குர்பாஸ் 19 ரன்களும், குல்படின் நைப் 18 ரன்களும், எடுத்தனர். ஜனத் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணி சார்பில் முகமது சமி 3 விக்கெட்களும், அஸ்வின் 2 விக்கெட்களும், ஜடேஜா மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்கள் எடுத்தனர்.