சென்னை
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் சார்பில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். இதனால் மற்ற வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் தற்போது நடை பெற்று வருகிறது. ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
முதலில் ஷிகர் தவான் பெயர் ஏலத்தில் விடப்பட்டது. அவரை ஏலத்தில் எடுக்க மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டி போட்டன. தவானை ரூ. 5.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் கேட்ட நிலையில் ஹைதராபாத் அணி தக்கவைத்தது
இதனையடுத்து அஸ்வின் ஏலத்தில் விடப்பட்டார். அஸ்வினை எடுப்பதில் அணிகள் இடையே போட்டி நிலவியது. இறுதியில் ரூ 7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணி அஸ்வினை எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
பஞ்சாப் அணி சார்பில் தான் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் சூதாட்டம் போன்றது நான் எனது புதிய வீட்டிற்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிய நினைவுகளுக்காக நான் சென்னை அணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள நிலையில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது :- வணக்கம் தமிழ்நாடு... என்னுடைய புது வீட்டில் விளையாடுவது மகிழ்ச்சி; உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண் இனி என்னை சிங்கமுன்னு வைக்கணும். என கூறி உள்ளார்.