கிரிக்கெட்

டெல்லி டெஸ்ட்: இலங்கை அணி திணறல், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

டெல்லியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

டெல்லி,

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்திருந்த போது காற்று மாசு பிரச்சினையை இலங்கை அணியினர் கையில் எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையால் டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி மேத்யூஸ், சண்டிமால் ஆகியோரின் சதத்தின் உதவியால், 373 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 163 ரன்கள் முன்னிலையுடன், 2-வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்திய கேப்டன் விராட் கோலி, 2-வது இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். தவான் (67 ரன்கள்) விராட் கோலி (50 ரன்கள்), ரோகித் ஷர்மா(50 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது, டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி, தங்கள் 2-வது இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி, இன்று 31 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களான கருண ரத்னே (13 ரன்கள்), சமரவிக்ரமா( 5 ரன்கள்) லக்மல்(0) ஆகியோர் வரிசையாய் பெவிலியன் திரும்பினர். டி சில்வா 13 ரன்களுடனும் மேத்யூஸ் ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர். நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இலங்கை அணி வெற்றி பெற 379 ரன்கள் தேவையுள்ளது. இதனால், இலங்கை அணி டிரா செய்யவே போராடும். இருப்பினும், இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.