பெங்களூர்,
உலகின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு பேட்டிங்கில் அரை சதம் அடித்தார்.
6 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார். கபில்தேவ் 434 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வின் 436 விக்கெட்டுகளை எடுத்து அவரை தாண்டி இந்திய வீரர்களில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.
இந்தநிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த அஸ்வினை பாராட்டும் விதமாக அவரது வீட்டுக்கு கபில்தேவ் பூங்கொத்து ஒன்றை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக அஸ்வின் கூறும்போது;
கபில்தேவின் சாதனையை முறியடித்தது கனவு போல் உள்ளது. இவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை.
கபில்தேவ் என் வீட்டுக்கு பூங்கொத்து அனுப்பி, கைப்பட வாழ்த்து கடிதத்தையும் அனுப்பி இருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.