சென்னை,
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான நடராஜன் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். அறுவை சிகிச்சை தான் அவரது காயத்திற்கு தீர்வு என மருத்துவர்கள் சொல்லிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
இந்த சூழலில் நடராஜனுக்கு மூட்டு பகுதியில் இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இன்று எனக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கவனத்துடன் மிக கனிவாக பழகி எனக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. பிசிசிஐ-க்கு எனது நன்றிகள். நான் பூரண குணம் பெற வேண்டி எண்ணை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி என்று நடராஜன் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிசிசிஐ தனது டுவிட்டரில், விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். கூடிய விரைவில் பழையபடி உங்களை களத்தில் காண காத்திருக்கிறோம் என்று பதிவிட்டிருந்தது.