இந்திய சுழற்பந்து வீரரான அனில் கும்ப்ளே, 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விலகினார். பின்னர் அவர், 2016 ஆம் ஆண்டு, இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் முடியவுள்ளதால், அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டுவருகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கும்பிளே மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.
பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், இந்திய ஏ அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி, இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தனர்.
பயிற்சியாளர் நியமிப்பது தொடர்பாக, முன்னாள் இந்திய அணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, வி.வி.எஸ்.லெட்சுமணன் ஆகியோர் லண்டனில் சந்தித்து விவாதித்தனர்.
இதுதொடர்பாக, பிசிசிஐ-யின் பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுதிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான தொடரில், தற்போது உள்ள அணியே தொடர வேண்டும். இதற்கிடையில் பயிற்சியாளரை நியமிப்பது சிரமம். கும்ப்ளே சிறந்த பயிற்சியாளராக செயல்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார். எனவே, 2019 ஆம் ஆண்டு வரை கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராகத் தொடர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேப்டன் விராட் கோலியும் இதற்கு ஓ.கே கூறிவிட்டாராம். அட்ஜஸ்ட் செய்வதில் தவறில்லை என கோலி பிசிசிஐ நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.