புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், கேப்டனாக சாதனை படைத்த விஷயத்தில் டோனி தான் நிச்சயம் முன்னணியில் இருப்பார். நான் பல கேப்டன்களின் கீழ் இந்திய அணியில் விளையாடி இருந்தாலும், சிறந்த கேப்டன் யார்? என்று கேட்டால் அனில் கும்பிளேவை தான் சொல்வேன். சவுரவ் கங்குலி கேப்டனாக தனது பணியை சிறப்பாக செய்தார். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒருவர் நீண்ட காலமாக கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பது கும்பிளேவை தான். கும்பிளே தலைமையின் கீழ் நான் 6 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறேன். இந்திய அணிக்கு கும்பிளே நீண்ட நாட்கள் கேப்டனாக இருந்ததில்லை. ஒருவேளை அவர் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருந்தால் நிறைய சாதனைகளை முறியடித்து இருப்பார் என்று தெரிவித்தார்.