அடிலெய்டு,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. பகல்-இரவு மோதலான இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய வீரர்கள், எதிரணி வீரர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வசைபாடுவதில் (ஸ்லெட்ஜிங்) கில்லாடிகள் என்று பத்திரிகை ஒன்றில் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுமித், பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் நாங்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடினோம் என்று நினைக்கிறேன். அதே போன்று தொடர் முழுவதும் செயல்படுவோம். ஏற்கனவே சொன்னது போல் களத்தில் நாங்கள் வரம்பு மீறி நடப்பதில்லை. ஆண்டர்சன் எழுதிய கட்டுரையை நானும் படித்தேன்.
அவர் எங்களை மிகப்பெரிய வசைபாடிகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வசைபொழிவதில் அவர் தான் மிகவும் மோசமானவர். 2010-ம் ஆண்டு போட்டியின் போது அவர் என்னிடமே கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டார் என்றார்.