மும்பை,
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்,1989 ஆம் ஆண்டு இந்த நாளில் தனது 16-வது வயதில் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளது.
அவர் அறிமுகமான அதே போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசும் அறிமுகமானார். டிராவில் முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில், டெண்டுல்கரை முதல் இன்னிங்சில் 15 ரன்களில் வக்கார் யூனிஸ் ஆட்டமிழக்கச் செய்தார்.
டெண்டுல்கர், 2013 இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இன்றுவரை, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் அதிக ரன்களை குவித்தவர் மற்றும் சர்வதேச அளவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
2019 ஆம் ஆண்டில், ஐ.சி.சி-யால் புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஆறாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி மொத்தம் 34,357 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இது இரண்டாவது இடத்தில் உள்ள முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை விட 6,000 ரன்களுக்கும் அதிகம் ஆகும்.
46 வயதான அவர் தற்போது ஐ.பி.எல்-இல் போட்டியிடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வழிகாட்டியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.