சென்னை,
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன் ஷான் மசூத் தலைமையில் தொடர்ந்து நதோல்விகளை சந்தித்து வரும்நிலையில், அவருக்குப் பதிலாக சல்மான் ஆகா புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2023 டிசம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சமீபத்தில் வங்காளதேசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக 4-வது தோல்வியையும் பதிவு செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 12 டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த கேப்டன்களில் ஒருவராக மசூத் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இருப்பினும் தன்னை கேப்டன் பதவியில் தொடர அனுமதிக்குமாறு ஷான் மசூத்,மொஹ்சின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அணியின் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவு காரணமாக, நிர்வாகம் கேப்டன் மாற்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஷான் மசூத் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் 4 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளதால், அவரது இடமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது தலைமைப் பயிற்சியாளராகவும், உமர் குல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 25 முதல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. அதற்கு முன்பாக புதிய கேப்டன் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.