கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: முஷ்பிகுர் ரஹீம் அபார சதம்... பாகிஸ்தானுக்கு 437 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

லைஹெட்,

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 278 ரன்னில் அடங்கியது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 57.4 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தன்சித் ஹசன் (4 ரன்கள்) சீக்கிரமே ஆட்டமிழந்தார்.

இதன் பின் ஜோடி சேர்ந்த மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் மோமினுல் ஹக் ஜோடி அணியை மீட்டெடுத்தது. ஜாய் அதிரடியாக விளையாடி தனது 6-வது டெஸ்ட் அரைசதத்தை அடித்தார். அவர் 52 ரன்கள் (10 பவுண்டரிகள்) எடுத்திருந்த போது முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாந்தோ 15 ரன்களுக்கு குர்ராம் ஷாசாத் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன் பிறகு முஷ்பிகுர் ரஹீமுடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் லிட்டன் தாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது 20-வது டெஸ்ட் அரைசதத்தைக் கடந்த லிட்டன் தாஸ் 69 ரன்கள் எடுத்திருந்த போது ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

மிடில் ஆர்டரில் மெஹிதி ஹசன் மிராஸ் 19 ரன்களும், தைஜுல் இஸ்லாம் 22 ரன்களும் எடுத்து முஷ்பிகுருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர். தைஜுல் - முஷ்பிகுர் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது. இறுதியில் தஸ்கின் அகமது 6 ரன்களுக்கும், ஷோரிபுல் இஸ்லாம் 12 ரன்களுக்கும் அவுட் ஆகினர். வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசியகுர்ராம் ஷாசாத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சஜித் கான் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Also read:தொடர்ச்சியாக 6 தோல்விகள்... பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் புலம்பல்

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 437 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவாலான இந்த இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 2 ஓவர்கள் வீசப்பட்டநிலையில், ரன் ஏதும் எடுக்காமல் 3-வது நாள் முடிவுக்கு வந்தது. அசான் அவாய்ஸ் மற்றும் அப்துல்லா பசல் களத்தில் உள்ளனர். நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.