ஐதராபாத்
ஐ.பி.எல். தொடரின் 45-வது ஆட்டம் ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்த போட்டியின் 11-வது ஓவரை கேமரூன் கிரீன் வீசினார். அப்போது 4-வது பந்து ஆப்-ஸ்டம்ப் நோக்கி வீசப்பட்டது. அதனை ஹென்ரிச் கிளாசன் பவுண்டரிக்கு அடிக்க முற்பட்டார்.
எனினும், மிட்-விக்கெட்டில் பீல்டிங்கில் நின்றிருந்த ரோவ்மன் பவல்லை விட்டு சற்று நகர்ந்தபடி பந்து உயரே பறந்து வந்தது. ஆனால், சற்றும் தளராமல் ஓடி சென்ற பவல் தாவி, ஒற்றை கையில் அதனை பிடித்து, கிளாசனை வெளியேற்றினார். இந்த பீல்டிங்கின்போது பவல் தரையில் விழுந்து, உருண்டபோதும் கேட்ச்சை விடாமல் பந்து அவருடைய கைக்குள்ளேயே இருந்தது.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. எனினும், முடிவு மூன்றாவது நடுவரிடம் விடப்பட்டது. அதுபற்றிய ரீப்ளேவில் பந்து தரையில் படாமல், பவல்லின் கைகளில் இருந்தது தெரிய வந்தது. இதனால், கிளாசன் அவுட் என அறிவிக்கப்பட்டார். கிளாசனின் அவுட் அந்த அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.
போட்டியின் இறுதியில் ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.