புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் வெளிநாடுகள் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை அனுப்பி வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர், அணி நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் என அனைவரும் அணியாக இணைந்து இந்த நிதியில் பங்களிப்பு செய்துள்ளனர். ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட் இணைந்து இந்தியாவுக்கு உதவியுள்ளன.
இந்த நிதியை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தற்போதைய நெருக்கடி சூழலை சமாளிக்கவும், ஆக்சிஜன் தேவையை சமாளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.