image courtesy: @IPL / @LucknowIPL 
கிரிக்கெட்

ரிஷப் பண்ட் அதிரடி சதம்... பெங்களூருவுக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்கள் எடுத்தார்.

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதன்படி லக்னோவில் இன்று இரவு நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து லக்னோவின் தொடக்க வீரர்களாக பிரீட்ஸ்கே மற்றும் மிட்செல் மார்ஷ் களம் புகுந்தனர். இதில் பிரீட்ஸ்கே 14 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் பண்ட் களம் இறங்கினார். பண்ட் மற்றும் மார்ஷ் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய பண்ட் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ஆட உள்ளது.