மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புனேயில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அந்த அணியில் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
ஆனால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பெங்களூரு அணியின் கடைசி ஓவரை ஹர்ஷல் பட் டேல் வீசினார். இந்த ஓவரில் பராக் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்தார்.
முதல் இன்னிங்ஸ் நிறைவு பெற்றதை அடுத்து ரியான் பராக் டிரெஸ்ஸிங் அறை நோக்கி செல்ல திடீரென ஹர்ஷல் பட்டேல் அவரை நோக்கி வேகமாக வந்தார்.
ஆக்ரோஷமாக காணப்பட்ட அவர் பராக்-யிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். பின்னர் ராஜஸ்தான் அணியை சேர்ந்த உதவியாளர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார். இந்த மோதலுக்கான காரணம் தெரியவரவில்லை
இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.