மும்பை,
மும்பை அணியின் சமீபத்திய ஐபிஎல் பார்ம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே பதிலடி கொடுத்துள்ளார்.
மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாகும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் 2020க்கு பிறகு கடந்த 5 சீசன்களாக அந்த அணிக்கு பட்டம் கைவரவில்லை. 2 முறை மட்டுமே பிளேஆப்ஸுக்கு சென்றது. 2022 மற்றும் 2024 சீசன்களில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த ஜெயவர்தனே, “இப்போது ஐபிஎல் 10 அணிகளுடன் நடைபெறுவதால் போட்டி கடுமையாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் 2 முறை பிளேஆப்ஸுக்கு சென்றுள்ளோம். 4-5 ஆண்டுகளாக பட்டம் இல்லை என்று ஆரம்பத்திலேயே அழுத்தம் கொள்வதை விட, எங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவதான் முக்கியம். சில அணிகள் இன்னும் ஒரு பட்டம் கூட வெல்லவில்லை என்பதை மறக்கக் கூடாது,” என்றார்.
2026 சீசனை மும்பை அணி வலுவாக துவங்கியுள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ரிக்கல்டன் அரைசதம் அடித்து அசத்தினர்.