அகமதாபாத்,
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - கனடா மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கனடா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் 59 ரன்கள், டிகாக் 25 ரன்கள், ரையான் ரிகல்டன் 33 ரன்கள், டேவிட் மில்லர் 39 ரன்கள், ஸ்டப்ஸ் 34 ரன்களை குவித்தனர்.
கனடா தரப்பில் அந்த அணியின் அனுஷ் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கனடா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணியின் ரன் வேகம் மட்டுப்பட்டது. 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த கனடா அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.