சார்ஜா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேஎல் ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். 5 ரன்கள் எடுத்திருந்த அகர்வாலையும் ஹோல்டர் வீழ்த்தினார்.
அடுத்துவந்த கெயில் மற்றும் மார்க்ரம் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால், 14 ரன்கள் எடுத்த கெயில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிகோலஸ் பூரன் 8 ரன்னில் வெளியேறினார்.
சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்து அப்துல் சமத் பந்து வீச்சில் வெளியேறினார். ஆனால், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப் வீரர்கள் யாராலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.