கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: அவிஷ்கா பெர்னாண்டோ சதம்... ஆப்கானிஸ்தான்’ஏ’க்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை’ஏ’

ஆப்கானிஸ்தான்-ஏ தரப்பில் பரிதூன் தவூட்சாய் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தம்புல்லா,

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்று வரும் 6-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை’ஏ’ அணி ஆப்கானிஸ்தான்’ஏ’ அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

முத்தரப்பு ஒருநாள் தொடர்

இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

6-வது லீக் ஆட்டம்

இந்த தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் இன்று மோதி வருகின்றன. தம்புல்லாவில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்-ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை-ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது.

டிக்வெல்லா - அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடி

இலங்கை-ஏ அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். டிக்வெல்லா 66 ரன்கள் எடுத்த நிலையில் பரிதூன் தவூட்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ சதம் விளாசி அசத்தினார். அவர் 110 ரன்கள் குவித்து முகமது இப்ராஹிம் பந்துவீச்சில் வெளியேறினார்.

நுவனிது பெர்னாண்டோ போராட்டம்

அடுத்து களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமா 14 ரன்களும், கேப்டன் சஹான் ஆரச்சிகே 12 ரன்களும், அஹான் விக்ரமசிங்கே 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் ரவிந்து பெர்னாண்டோ- வனுஜா சஹான் ஜோடி ஸ்கோரை உயர்த்தியது.

இலங்கை-ஏ வலுவான ஸ்கோர்

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை-ஏ அணி 322 ரன்களை எட்டியது. ஆப்கானிஸ்தான்-ஏ தரப்பில் பரிதூன் தவூட்சாய் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான்-ஏ அணி களமிறங்க உள்ளது.