சென்னை.
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். 'யுனிவர்ஸ் பாஸ்' கிரிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடித்து, கிரிக்கெட் உலகின் புதிய அதிரடி நாயகனாக உருவெடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிக விரைவாக 50 சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். இதற்கு முன் கிரிஸ் கெய்ல் 21 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை விளாசி சாதனைப் புத்தகத்தை மாற்றி எழுதியுள்ளார்.
அன்றைய போட்டியில் மட்டும் 12 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், ஐபிஎல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது ஆரஞ்சு கேப் வரிசையில் மூன்றாவது இடத்தில் வைபவ் உள்ளார்.