கிரிக்கெட்

ஈடன் கார்டனில் நடக்கப்போகும் வரலாற்றுச் சாதனை... இந்திய அளவில் முதலிடம் பிடிப்பாரா வைபவ்?

இந்திய டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை தற்போது தேவ்தத் படிக்கல் வைத்துள்ளார்.

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜாம்பவான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து வருகிறார். நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில், ஒரு பெரிய சாதனையை முறியடிக்க வைபவ் தயாராகி வருகிறார்.

இந்திய டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை தற்போது தேவ்தத் படிக்கல் வைத்துள்ளார். படிக்கல் இந்த மைல்கல்லை 25 இன்னிங்ஸ்களில் எட்டினார். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 23 இன்னிங்ஸ்களில் 901 ரன்களைக் குவித்துள்ளார். நாளை ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள தனது 24-வது இன்னிங்ஸில் வைபவ் இன்னும் 99 ரன்கள் எடுத்தால், படிக்கல்லின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடிப்பார்.

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி அசத்திய வைபவ், மீண்டும் ஒரு பெரிய இன்னிங்ஸ் மூலம் வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் வெறும் 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்களைக் குவித்துள்ளார் வைபவ். இதில் 18 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.தற்போது 251 ரன்களுடன் சுப்மன் கில் ரன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த போட்டியில் வைபவ் வெறும் 52 ரன்கள் எடுத்தால், கில்லை முந்தி 'ஆரஞ்சு தொப்பியை' (Orange Cap) வெல்லும் வாய்ப்பு உள்ளது.