Image Courtesy: @IPL / @PunjabKingsIPL  
கிரிக்கெட்

லக்னோவுக்கு எதிரான வெற்றி... பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியது என்ன..?

லக்னோவுக்கு எதிரான போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது.

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையில் இந்த வெற்றியால் மகிழ்ச்சி. அனைவரும் சரியான நேரத்தில் அசத்துகின்றனர். ஒவ்வொரு வீரர்களிடமும் இருந்து கிடைக்கும் பங்களிப்பு மகத்தானது. பிரப்சிம்ரன் இன்று அற்புதமாக விளையாடியதைப் பார்த்தது சிறப்பாக இருந்தது.

நல்லவேளையாக தரம்சாலா மைதானத்தில் எங்களுடைய ரெக்கார்ட் பற்றி எனக்குத் தெரியாது. பிட்ச்சை பார்த்து போட்டியை வெல்ல வேண்டும் என்பதே எனது மனநிலையாக இருந்தது. இதுவரை நாங்கள் அதிர்ஷ்டத்துடன் இருந்துள்ளோம். எங்களுடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றால் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருக்கிறது. வீரர்கள் அனைவரும் தங்களுடைய வேலையை அறிந்து சரியான நேரத்தில் அசத்துகின்றனர்.

நாங்கள் களத்தில் நகரும் விதம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் மட்டுமே சரியாக இருக்க வேண்டும். புள்ளி விவரங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் உங்களுக்கு நீங்களே ஆதரவு கொடுத்து உங்களது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி எப்படி அசத்த முடியும் என்று பார்க்க வேண்டும். வெற்றி முடிவு என்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.