புதுடெல்லி,
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் இருபது ஓவர் போட்டிகள் 2008 ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக அளவில் இந்த தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர். இதனால், பணம் கொழிக்கும் விளையாட்டு தொடராக இந்த ஐபில் தொடர் உள்ளது.
இப்போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான வீவோ மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த உரிமையை சுமார் ரூ. 2,199 கோடிக்கு வீவோ கைப்பற்றியது. கடந்த முறையைவிட சுமார் 554 மடங்கு அதிகமான தொகைக்கு இந்த உரிமையை வீவோ பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கான ஏலத்தை வீவோ நிறுவனம் 200 கோடிக்கு மட்டுமே எடுத்திருந்தது. அதற்கு முன்னதாக பெப்சி நிறுவனம் 396 கோடி ரூபாய்க்கு ஐந்து வருடத்திற்கு உரிமையை பெற்றிருந்தது.
(2018-22) வருடத்திற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷிர்ஷிப் உரிமயை பெற ஏலம் கேட்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் ஏலம் எடுக்க முயற்சித்தன. ஆனால் இந்த முறையும் சென்ற ஆண்டின் ஸ்பான்சரான வீவோ மொபைல் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. வீவோவுக்கு அடுத்த படியாக மற்றொரு மொபைல் நிறுவனமான ஓப்போ 1430 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்தது.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை வீவோ கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் உரிமையை மீண்டும் வீவோ கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் வீவோ வுடனான கூட்டு மிகச்சிறந்ததாக அமைந்திருந்தது. இதைமேலும் சிறப்பாகவும் வலுவாகவும் வீவோ தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரின் முதல் சீசனில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரை பிரபல ரியல் எஸ்டேட் குழுமமான டி.எல்.எப் நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.