கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று நம்பலாம்.
முதலாவது டெஸ்டை பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி, புஜாராவின் பேட்டிங் சொதப்பல் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய அணி தலைநிமிர வேண்டும் என்றால் அவர்கள் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் ஏற்பட்ட வீக்கம் சரியாகி விட்டதால் அவர் களம் காண உள்ளார்.
அதே சமயம் இந்திய அணிக்கு பின்னடைவாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மீண்டும் வலது கணுக்கால் காயத்தில் சிக்கியிருக்கிறார். வலி அதிகமாக இருப்பதால் இந்த டெஸ்டில் அவர் விளையாடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது நவ்தீப் சைனி ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவார் என்றும் அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஷாந்த் ஷர்மா முதலாவது டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
புற்கள் நிறைந்த கிறைஸ்ட்சர்ச் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே உகந்தது. டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர், கைல் ஜாமிசன் ஆகிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை வறுத்தெடுக்க காத்திருக்கிறார்கள். இவர்களின் தாக்குதலை நமது பேட்ஸ்மேன்கள் சமயோசிதமாக சமாளிப்பார்களா? அல்லது பணிந்து விடுவார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-