துபாய்,
20- ஓவர் உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. கிரிக்கெட் உலகில் பரம வைரிகளாக கருதப்படும்
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை உலக கோப்பை தொடர்களில் இந்தியாவை இதுவரை வீழ்த்தியது இல்லை. இதனால் கூடுதல் நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணி உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எப்போதுமே நான் எளிமையாக இருக்கும் விஷயத்தில்தான் கவனம் செலுத்துவேன். என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடுவேன். ஒவ்வொரு பந்தையும் நிதானமாக ஆடுவேன். கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம். கடந்த கால வரலாறுகள், சாதனைகள் மாற்றப்படும்.
அனைத்து வீரர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். வீரர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கிறோம். நாளை போட்டி நடக்கும் நாளில் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதுதான் கேள்வி. எங்களிடம் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடுவோம். 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.