கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டோம் - பாகிஸ்தான் மீண்டும் உறுதி

முடிவை மாற்றவில்லையென்றால் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக . மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.

இதற்கிடையே, இந்தியாவுடன் விளையாடாதது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆஹா கூறுகையில், 'உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ஆடமாட்டோம் என்பது எங்களது (வீரர்கள்) முடிவல்ல. இந்த விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஒப்பந்த வீரர்கள். எங்களது அரசாங்கம், கிரிக்கெட் வாரியம் என்ன சொல்கிறதோ அதை செய்வோம். இந்தியாவுடன் ஆடாவிட்டாலும் எங்கள் குரூப்பில் உள்ள மற்ற 3 அணிகளை (அமெரிக்கா, நெதர்லாந்து, நமிபியா) தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம்' என்றார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.