image courtesy:PTI 
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்

கடந்த 2 சீசன்களாக பெங்களூரு அணியின் உதவி பயிற்சியாளராக இவர் செயல்பட்டுள்ளார்.

பெங்களூரு,

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.

இதில் முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த சீசனுக்கு முன் தங்களது தலைமை பயிற்சியாளரை மாற்றியுள்ளது.

அதன்படி புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரரான மலோலன் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலோலன், கடந்த 6 ஆண்டுகளாக அந்த அணியுடன் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் மகளிர் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.