சவுத்தம்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று முதல் நடைபெறுவதாக இருந்தது.
முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் மைதானத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் (இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி) போட்டி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், சவுத்தம்டனில் இன்று காலை முதல் மழை பெய்யது வருகிறது. இதனால், இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
டாஸ் இன்னும் சுண்டப்படாமலேயே உணவு இடைவேளை வரை போட்டி தடைபட்டது. ஆனால், உணவு இடைவேளைக்கு பின்னரும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனால், இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட சுண்டப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாற்று நாளாக (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு அந்த நாளிலும் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.