கொல்கத்தா,
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் பின் ஆலன் களமிறங்கினர். 2-வது ஓவரில் பின் ஆலன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இந்த நிலையில் 3.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் கொல்கத்தா -பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. ரஹானே 8 ரன்களுடனும், ரகுவன்ஷி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கும் என நடுவர்கள் அறிவித்து இருந்தனர். ரசிகர்களும், மழை நிற்கும், அதன் பின்னர் போட்டி தொடங்கும் என மைதானத்திலேயே காத்திருந்தனர். ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இதனால் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டி மழையால் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. மழையால் போட்டி ரத்தானதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.