மெக்சிகோ சிட்டி,
எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டம் புதிய வரலாற்றை படைத்துள்ளது. மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் மொத்தம் 3 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் அதிக சிவப்பு அட்டைகள் காட்டப்பட்ட முதல் போட்டி என்ற சாதனை பதிவாகியுள்ளது.
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை ஆரம்பித்தது.
ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே ஜுலியன் அண்ட்ரே குவினோன்ஸ் கோல் அடித்து மெக்சிகோவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் நட்சத்திர முன்னணி வீரர் ரவுல் ஜிமினெஸ் கோல் அடித்து அணியின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.
போட்டியின் போது தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்பெபெலோ சிதோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோர் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 9 வீரர்களுடன் மட்டுமே ஆட்டத்தை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மெக்சிகோ அணியின் டிபெண்டர் செசர் மான்டெஸ், பெனால்டி பகுதியின் விளிம்பில் குலிசா முதாவை முரட்டுத்தனமாக தடுத்ததற்காக நடுவர் சிவப்பு அட்டை காட்டினார். இதனால் மெக்சிகோ அணியும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடியது.
இந்த ஆட்டத்தில் மொத்தம் 3 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டதால், உலகக்கோப்பை வரலாற்றில் தொடக்கப் போட்டியிலேயே அதிக ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட முதல் ஆட்டம் என்ற புதிய சாதனை உருவாகியுள்ளது.