கால்பந்து

22 ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியர் லீக் சாம்பியனான ஆர்சனல்... ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆர்சனல் அணி இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2003/2004 -ம் ஆண்டு சீசனில் தான் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றிருந்தது.

லண்டன்,

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஆர்சனல் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஆர்சனல் அணி, பர்ன்லி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால், சாம்பியன் பட்டத்திற்கான பந்தயத்தில் நீடிக்க வேண்டிய கட்டாயத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மான்செஸ்டர் சிட்டி அணி இன்று போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தன. இதனால் மான்செஸ்டர் சிட்டி அணியால் ஆர்சனல் அணியின் புள்ளியை முந்த முடியாமல் போனது. இதன் விளைவாக, ஆர்சனல் அணி நடப்பு சீசனின் சாம்பியன் மகுடத்தைச் சூடியது.

ஆர்சனல் அணி இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2003/2004 ஆம் ஆண்டு சீசனில் தான் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றிருந்தது. அதற்குப் பின் கடந்த மூன்று சீசன்களாகவே (2022/23, 2023/24, 2024/25) கோப்பையின் மிக அருகில் வரை சென்று நூலிழையில் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்து ஏமாற்றமடைந்தது.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, இந்த முறை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சனல் அணி, தனது 22 ஆண்டுகால நீண்ட கால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளது. ஆர்சனல் அணியின் இந்த வரலாற்று வெற்றியை உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.