கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: 3-1 கோல் கணக்கில் வெற்றி; அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

அர்ஜென்டினாவின் லாவ்தரோ மார்டினெஸ் (121 நிமிடம்) அணிக்கான 3-வது கோலை போட்டார்.

கான்சாஸ் சிட்டி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்), 3-வது சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அர்ஜென்டினா முன்னிலை

அந்த வகையில், காலை 6.30 மணிக்கு அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள கான்சாஸ் மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை போட்டார்.

தொடர்ந்து போட்டியின் முதல் பாதி முடியும் வரை வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது.

ரெட் கார்டு

எனினும், 2-ம் பாதியில் போட்டி பரபரப்படைந்தது. 68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அணியின் வீரரான டேன் டோயே அந்த கோலை போட்டதும், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் அடைந்தது.

அதன்பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டும் அதன் முதல் 15 நிமிடங்களில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. அடுத்த 15 நிமிடங்களில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை என்றால் ஷூட்அவுட் கட்டத்திற்கு போட்டி செல்லும் நிலை ஏற்பட்டது.

ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில், சுவிட்சர்லாந்து அணியின் பிரீல் எம்போலோவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால், அந்த அணியின் பலம் குறைந்து.

அர்ஜென்டினா வெற்றி

கூடுதல் நேரத்தின் 112-வது நிமிடத்தில், ஜூலியன் ஆல்வாரெஜ் 2-வது கோலை போட்டார். 120 நிமிடங்கள் முடிந்த பின்னரும் கூடுதலாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, முதல் நிமிடத்திலேயே அர்ஜென்டினாவின் லாவ்தரோ மார்டினெஸ் (121 நிமிடம்) அணிக்கான 3-வது கோலை போட்டார். அதன்பின்னர் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இதனால், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-1 கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று, அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அர்ஜென்டினா விளையாட உள்ளது.