புதுடெல்லி,
தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் 18 வயதான விஷ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் கடந்த மாதம் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்க சென்ற போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருடன் இணைந்து தமிழக மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் சென்னையில் அடிக்கடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
விஷ்வாவின் மறைவு அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஷில்லாங்கில் நடந்த தேசிய சீனியர் டேபிள் டென்னிசில் தான் வென்ற 10-வது பட்டத்தை விஷ்வாவுக்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் கிடைத்த பரிசுத்தொகை ரூ. 2.75 லட்சத்தை அவரது குடும்பத்துக்கு வழங்குவதாக சரத்கமல் தற்போது அறிவித்துள்ளார்.
மேலும் சரத் கமல் கூறுகையில், 'விஷ்வா அவர்களது ஒரே மகன். அவரது தந்தை ஊரடங்கின்போது வேலையை இழந்து விட்டார். அவரது குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். அத்துடன் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், இன்னும் சிலரிடம் பேசியுள்ளேன். பலரும் ஆதரவுகரம் நீட்டுவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.