பிற விளையாட்டு

உலகக் கோப்பை வில்வித்தை - இரட்டை தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்

தீரஜ், உலகக் கோப்பை ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அன்டல்யா,

துருக்கியின் அன்டால்யா நகரில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது நிலை போட்டி நேற்று நிறைவடைந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் தீராஜ் பொம்மதேவரா, தென்கொரியாவின் லீ வூ சியாக்கை 7-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 24 வயதான ஆந்திராவை சேர்ந்த தீரஜ் பொம்மதேவாரா, உலகக் கோப்பை ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு தங்கம்

முன்னதாக நடைபெற்ற ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் தீரஜ் பொம்மதேவாரா மற்றும் இந்திய வீராங்கனை கும்கும் அனில் மொஹந்தா இணைந்து களமிறங்கினர். இந்த இந்திய ஜோடி, ஒலிம்பிக் சாம்பியன்களான தென்கொரியாவின் ஓ யே ஜின் மற்றும் கிம் ஜே டியாக் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது.

இந்திய வில்வித்தைக்கு பெருமை

ஒரே உலகக் கோப்பை தொடரில் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை வென்ற தீரஜ் பொம்மதேவாரா, இந்திய வில்வித்தை உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்த சாதனை, எதிர்கால சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.