புதுடெல்லி,
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியான இந்திய வீரர்களை அடையாளம் காண்பதற்கான தேர்வு போட்டிகள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற சாதனையாளரான சுஷில்குமார் தகுதி சுற்றின் அரையிறுதியில் பிரவீன் ராணாவை எதிர்கொண்டார். ஆட்டத்தின்போது பிரவீன் ராணா, சுஷில்குமாரின் கையை கடிக்க முயற்சித்தார். இதை பார்த்த சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் பிரவீன் ராணா, மோசடி பேர்வழி என்று கோஷமிட்டனர்.
அரையிறுதியில் சுஷில்குமார் வெற்றி பெற்ற பிறகு அரங்கின் வெளிப்பகுதியில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கைகலப்பில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரவீன் ராணாவின் சகோதரர் நவீன் தாக்கப்பட்டார். சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பிரவீன் ராணா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மோதல் தொடர்பாக பிரவீன் ராணாவின் சகோதரர் நவீன் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சுஷில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 323 (வேண்டும் என்றே காயத்தை ஏற்படுத்துதல்) 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.