ஓர்லியான்ஸ்,
பிரான்சில் நடைபெற்று வரும் ஓர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள 17 வயதான தன்வி ஷர்மா, ஜப்பானின் 23-ம் நிலை வீராங்கனை நட்சுகி நிடாய்ராவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தன்வி, 21-14, 21-14 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு பக்கம், ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ஹரிகரன் அம் சகருணன் - எம்.ஆர். அர்ஜுன் ஜோடி, இந்தோனேசியாவின் லியோ கார்னான்டோ - பகாஸ் மவுலானா இணையை எதிர்கொண்டது. கடுமையாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.