பிற விளையாட்டு

குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டி; இந்தியாவின் சிவா மற்றும் ராணி தங்கம் வென்றனர்

ஜப்பானில் நடந்த குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டியில் இந்தியாவின் சிவா மற்றும் ராணி தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.

டோக்கியோ,

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் அடுத்த வருடம் நடைபெற உள்ளன. இதற்கான சோதனை போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டி ஒன்றில் ஆடவருக்கான 63 கிலோ எடை பிரிவில் இந்திய வீரரான சிவா தபா, கஜகஸ்தான் நாட்டின் தேசிய சாம்பியன் மற்றும் ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவரான சனடாலி தொல்டாயேவ் என்பவருடன் விளையாடினார்.

இந்த போட்டியில், 4 முறை ஆசிய பதக்கம் வென்றவரான தபா 5-0 என்ற புள்ளி கணக்கில் சனடாலியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நடப்பு தேசிய சாம்பியன் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், முன்னாள் வெண்கல பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றவர் தபா ஆவார்.

இதேபோன்று மகளிருக்கான குத்து சண்டை போட்டி ஒன்றில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் கெய்ட்லின் பார்க்கர் விளையாடினர்.

ஆசிய போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவரான ராணி இந்த போட்டியில் கெய்ட்லினை வீழ்த்தி தங்கம் வென்றார்.

69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஆஷிஷை, ஜப்பானின் சூவன் ஒகாஜவா வீழ்த்தி தங்கம் வென்றார். இதனால் ஆஷிஷுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

SCROLL FOR NEXT