புதுடெல்லி,
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 19ந்தேதி தொடங்கி டெல்லியில் நடந்து வருகிறது. வருகிற 29ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியாகும்.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், தாய்லாந்து, துருக்கி, கொரியா, சிங்கப்பூர் மற்றும் அங்கேரி உள்ளிட்ட 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியை நடத்தும் இந்தியா சார்பில் 57 பேர் கொண்ட வலுவான அணி களம் இறங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை குவித்து வருகிறது.
இதில், இன்று நடந்த 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. மனு பேக்கர், ரஹி சர்னோபாத் மற்றும் சிங்கி யாதவ் ஆகியோர் கொண்ட இந்திய அணியானது போலந்து அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றியை பெற்றது.