Image Courtesy : AFP 
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி

தரவரிசையில் 152-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் போர்னா கோரிச்சிடம் ரபெல் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், தரவரிசையில் 152-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார்.

மழையால் தடைபட்டு தொடர்ந்த இந்த ஆட்டத்தில் நடால் 6-7 (9-11), 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போர்னா கோரிச்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். இந்த ஆட்டம் 2 மணி 51 நிமிடம் நீடித்தது.

கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின் அரைஇறுதியில் இருந்து வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய 36 வயதான ரபெல் நடால் அதன் பிறகு களம் திரும்பிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.