துபாய்,
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இரட்டையர் பிரிவு அரைஇறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லூசி ஹ்ரடேக்கா ஜோடி, உக்ரைனின் லியுட்மிலா கிச்செனோக் மற்றும் லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ ஜோடியை எதிர்த்து களமிறங்கியது.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை சானியா ஜோடி கைப்பற்றியது. ஆனால் அடுத்த இரண்டு செட்களை இழந்து தோல்வியை தழுவினர். முடிவில், (6-2, 2-6, 7-10) என்ற செட் கணக்கில் அவர்கள் தோல்வி அடைந்தனர்.
முன்னதாக சானிய மிர்சா, 2013ம் ஆண்டு அமெரிக்காவின் பெத்தானி மேடெக்-சாண்ட்ஸுடன் இணைந்து துபாய் சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார்.
இதுவரை மொத்தம் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 35 வயதான சானியா மிர்சா இந்த ஆண்டுடன் டென்னிஸ் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.