டென்னிஸ்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து வைரஸ் பாதிப்பினால் கிவிடோவா விலகல்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து வைரஸ் பாதிப்பினால் வீராங்கனை பெட்ரா கிவிடோவா விலகியுள்ளார்.#PetraKvitova

பிரிஸ்பேன்,

செக் குடியரசு நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா (வயது 27). 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்ற, உலக தர வரிசையில் 2ம் இடம் வகித்தவரான கிவிடோவா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபொழுது அங்கு புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டார்.

இதனால் படுகாயமடைந்த கிவிடோவாவுக்கு இடது கையில் நான்கு மணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டார். மே மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் விளையாடிய அவர், ஜூனில் நடந்த ஏகன் கிளாசிக் போட்டியில் பட்டமும் வென்றார்.

இறுதியாக அவர் அக்டோபரில் நடந்த டியான்ஜின் ஓபன் போட்டியில் பங்கேற்றார். அதன்பின்னர் 2018ம் ஆண்டில் நடைபெறும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டார்.

அவர் முதல் சுற்றில் எஸ்டோனியன் ஆனெட் கொன்டாவெயிட் உடன் விளையாட இருந்த நிலையில், தனக்கு ஏற்பட்ட வைரஸ் பாதிப்பினால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். #PetraKvitova #tennisnews #latesttamilnews