* மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் நேரடியாக பங்கேற்க வசதியாக இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயசுக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் இணைந்து ஆடுகிறார். சொந்த மண்ணில் பெயஸ் விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.
* ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான முன்னாள் பளுதூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, இந்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். முந்தைய ஒலிம்பிக் அனுபவத்தில் இருந்து அவர் நிறைய கற்று இருக்கிறார். இந்த ஒலிம்பிக்கில் அவர் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்றார்.
* நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் தாமதமாக வீசியது தெரியவந்ததால் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
* இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தீபா மாலிக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளி வீராங்கனையான 49 வயதான தீபா மாலிக், 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டுஎறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.