துரின்,
ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட்-ராபின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இதன்படி முதல் பிரிவான பச்சை பிரிவில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), காஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும், ரெட் பிரிவில் டேனியல் மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மேட்டியோ பெரெட்டினி (இத்தாலி), ஹூயூபர்ட் ஹர்காஸ் (போலந்து) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ரெட் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரரான ரஷியாவச் சேர்ந்த டேனில் மெட்விடேவ் 6-7 (3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி போலந்தைச் சேர்ந்த ஹூயூபர்ட் ஹர்காசை வீழ்த்தினார்.