மாவட்ட செய்திகள்

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: 4,331 பேர் எழுதினார்கள்

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் 4,331 பேர் எழுதினார்கள்.

தர்மபுரி,

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு தர்மபுரி மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 5,054 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 4,331 பேர் தேர்வை எழுதினார்கள். 723 பேர் தேர்வை எழுத வரவில்லை.

இந்த தேர்வு பணியில் 14 முதன்மை கண்காணிப்பாளர்கள், 14 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு பணியில் 56 ஆசிரியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட கல்வி முதன்மை கல்விஅலுவலர் ராமசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட கல்வி அலுவலர் சபியுல்லாகான், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோரும் தேர்வு நடந்த மையங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.