சின்னமனூர்,
சின்னமனூர் அருகே அப்பிபட்டி என்ற அழகாபுரி ஊராட்சி உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், எரசக்கநாயக்கனூர்-ஓடைப்பட்டி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓடைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) முத்துப்பாண்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது, பொதுக்கழிப்பறை இருந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விட்டதாகவும், இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாகவும் கிராம மக்கள் கூறினர். மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள சின்னமனூர்-அப்பிப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, ஏற்கனவே கழிப்பிட கட்டிடம் இருந்த இடத்தை தனிநபரிடம் இருந்து மீட்டு மீண்டும் அதே இடத்தில் கழிப்பறை கட்டித்தரவும், சின்னமனூர்-அப்பிப்பட்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.